இயேசு காண்பிக்கும் புதிய சகாப்தம் "நாளுக்கு நாள் புதிதாகும், இயேசுவின்
ஜீவியமே ஆகும்." இன்றைய கிறிஸ்தவ உலகில் உபதேசங்களுக்குப் பஞ்சம் இல்லை!
இவர்களுக்கு அன்னியமாய் போய் விட்டதெல்லாம், இயேசுவின் ஜீவன் அல்லது
அவரது ஜீவியம்! அந்த ஜீவனுக்குப் போகிறவழி இடுக்கமானது என விளம்பிய
ஜீவநாதரை இவர்கள் புறக்கணித்து விட்டார்கள். இவ்வாறு புறக்கணித்தவர் கள்,
இயேசுவோடு ஒட்டிக் கொண்ட பேதுருவிடம் சென்று "பேதுருவே, உன் குருவானவர்
கூறும் இடுக்கமான வழி உனக்கு விளங்கிவிட்டதா? இவர் கூறும், 'என்
மாம்சத்தையும் என் இரத்தத்தையும் புசியுங்கள்' எனக் கூறிய தாற்பரியம்
உனக்குப் புரிந்து விட்டதா?" என கேட்டிருந்தால், அதற்கு பேதுரு கூறிய
பதில் "எனக்கு தெரியாது, எனக்குப் புரியவில்லை!" என்பதாகவே
இருந்திருக்கும். "பின்பு ஏன் நீ அவரை பின்பற்றுகிறாய்?" என அவர்கள்
கேட்டிருந்தால், அதற்கு பேதுரு "இயேசு கூறும் மாம்சம், இரத்தம் ஆகிய
உபதேசம் எனக்குப் புரியவில்லை! ஆனால் இயேசுவை அறிவேன்! அவரது ஜீவியமும்
அறிவேன்! அவரது ஜீவியத்தின் உத்தமத்தை அறிவேன்!" என்றே ஆணித்தரமாக பதில்
கூறியிருப்பான். இன்று, நம் யாவரையும் அண்டிவரும் கேள்வி இதுதான்....
"உங்களுக்கு உபதேசம் வேண்டுமா அல்லது ஜீவியம் வேண்டுமா?" உபதேசத்தோடு
அல்ல உத்தம ஜீவியத்தோடு கரம் கோர்த்திடவே தீவிரம் கொள்ளுங்கள்!
ஜீவனுக்குள் நடத்தும் இடுக்கமான வழி அல்லது பாதை,சிலுவையின் பாதையேஆகும்!
நம் போன்ற சரீரத்தில் வந்த இயேசு, இந்த சிலுவையின் வழியாகவே "தன் சொந்த
ஜீவனுக்கு மரித்து பிதாவின் நித்திய ஜீவியத்தை" நிறைவாய் பெற்று
கொண்டார். இயேசுவிடம் தென்பட்டது, வெறும் உபதேசம் அல்ல! அவரிடமிருந்த
தெய்வீக தாழ்மை, அவரிடமிருந்த கற்பு நிறைந்த தூய வாழ்க்கை, பதட்டமில்லாத
விசுவாச வாழ்க்கை, சாந்தம், பொறுமை.... போன்ற தெய்வீகத்தின் முழுமையான
வெளிச்சமும் அவரிடம் காணப் பட்டது. இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பலோர்,
வரங்களில் பிரியப்படுகிறார்களே அல்லாமல், கனி கொடுக்கும்
ஜீவியத்திற்குரிய தங்கள் நாட்டத்தை இழந்தே காணப்படுகிறார்கள். "அன்னிய
பாஷையை" பேசுவதில் பிரியப்படுகிற இவர்கள், தங்கள்சொந்த தாய்
பாஷையில்தாறுமாறு கொண்டு வாழ்கிறார்கள்! அன்னிய பாஷையை பேசும்
இவர்களிடம், தாய் பாஷையில் கிருபை பொருந்திய வார்த்தைகளோ அல்லது
நாவடக்கமோ காணப்படுவது இல்லை. இன்று நமக்குத் தேவை, நல்ல பிரசங்கியோ
அல்லது நல்ல சபை கட்டிடமோ அல்ல! மாறாக "அவரோடு மரித்து, அவரோடு
பிழைத்திருக்கும்" ஜீவிய வெளிச்சத்தை பெற்ற மக்களும், அவர்கள் கூடி வரும்
சபையே நமக்குத் தேவை! இவ்வாறு இயேசுவின் வெளிப்பாட்டையும், அவரது
உறவையும் பெற்றவர்களே, இயேசு விரும்பும் "கற்பாறையாய்"
இருக்கிறார்கள்.இவர்களைக் கொண்டே இயேசு தன் சபையை கட்டுகிறார்
(மத்.16:18). அவரோடு மரித்து அவருக்குள் பிழைத்திருக்கும் (2தீமோ
.2:11)இயேசுவின் ஜீவியம், இடுக்கமான சிலுவையின் பாதையில் நடப்போருக்கே
கிட்டும்!
இந்த சிலுவையின் பாடுகளே இல்லாமல், உலக ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கலாம் எனக்
கூறிய சாத்தானையும், சிலுவையின் பாதையை தவிர்க்கும்படி கூறிய அவரது
அன்பான சீஷனையும்.... இயேசு ஒரே விதமாய் கண்டு "அப்பாலே போ சாத்தானே"
எனக் கூறினார். இன்றும், சிலுவையின் பாதையை புறக்கணிக்கிறவர்களுக்கு,
ஜீவனை அல்லது இயேசுவின் மகிமையான ஜீவியத்தை தேவன் ஒருபோதும்
அவர்களுக்குத் தருவதில்லை.
அவரோடு சேர்ந்து, தன் சொந்த ஜீவனுக்கு மரிப்பதும், கிறிஸ்துவின்
ஜீவனுக்குள் பிழைத்திருப்பதுமாகிய இந்த சுவிசேஷத்தைக் கேட்கிற
ஜனங்களில்....யார் இதை விசுவாசிப்பார்கள்?என்றே ஏசாயா தீர்க்கதரிசி 53:1
வசனத்தில் கூறினார்.இன்றும், இந்த மகிமையான ஜீவனுக்குள் பிரவேசிக்கும்,
சுவிசேஷத்தைக் கேட்கும் நீங்கள், இதை ஏற்று விசுவாசித்திட நெஞ்சத்தில்
தைரியம் உண்டோ?இந்த விசுவாசமே, இயேசு கொண்டு வந்த ஜீவனுக்குள்....
பரிபூரண ஜீவனுக்குள் உங்களை நடத்தும்! ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக