செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 5

வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள். வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள்.பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம்
கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக்
காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.

இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக்
கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல
விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.

(i) கல்லை வழிபடுதல்-Fetish worship

(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship

(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship

(iv) விக்ரம், சிலை செய்து வழிபடுதல் -Idol worship நாகரிக பண்பாட்டு
வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு
வந்தன.

தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.

பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச்
சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச்
சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.வழிபாடு என்றால்?

தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே
அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல்
நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால்
நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு.

பூசெய் = பூவால் செய் இது இணைந்தது தான் பூசெய் பூசை என இப்போதைய
வார்த்தையின் வடிவம் தோன்றியது. இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர்
எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.

வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக
இருந்திருக்கிறது.நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு...
என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.

'நாயக' நாயகி பாவம்' என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ்
இனம்தான். இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும்,
வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள்
தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலி
வரை சமணம் பரவிவிட்டது.நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.

வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து
நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.அவர்களில் ஒருவர்தான் மகேந்திர
பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.

புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி' உறவு முறை வரை நெருங்கி
விட்ட நிலையில்...பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறி முறைகளை இங்கே
விதைத்து வைத்தனர்.

புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால்
மறுபடியும் தலை தூக்கின.

பிராமணர்கள் இங்கே வந்த போது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது
பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)...
பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.

என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள்.
'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப்
பட்டிருக்கும் அந்தஸ்து'...
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது. வேத கர்மாக்களை
நிறைவேற்றுவதற்கான சடங்குகளியல் ஈடுபட்டிருக்கும் போது.. வஸ்திரத்தை
தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த
விதி.

அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில்
ஈடுபடும் போது அடிக்கடி அமர்ந்து எழுகின்ற போதும்.. வஸ்திரம் அவிழ்ந்து
நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று
பார்த்தார்கள்.

இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும் போது உபத்திரவம் செய்யாமல்
இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.

இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து
கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள்
இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக் கூட கொல்லக்கூடாது.
நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது!

மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம்
கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த
பிறகு...தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது.

இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. "இவை வெறும்
கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை
தெய்வமாக்குகிறேன்" என்றனர்.

பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த
தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக்
கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,(தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக