புதன், 21 செப்டம்பர், 2016

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 19

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்...? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா?

இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ
அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய
பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா
இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி
தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து... தண்மையான துங்கா நதியின்
மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின்
தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம்
மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.
மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க... அங்கேயும் சில
பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள்
அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.
அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது
விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான்
சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.

அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து
ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு
மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.
அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத்
தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி
என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.

மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர்
அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள்
மடாதிபதி என அழைக்கப்படுவார்.

அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார்.
இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.

மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம்
செய்பவர் அல்ல அதாவது... அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய
சிஷ்யர்கள்
இருந்திருக்கிறார்கள்.

சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு
சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint
becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி
மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?

அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப்
பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே
சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.

அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம்
வாங்குவதற்காக உள்ளே நுழைய..."நில்லுங்கள்" என்றது மடத்துக்காரரின் குரல்
நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார்.
நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள்.
""ஏன்...?" கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.

"ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம்.
உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான
லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார்.
பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது
இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்" என நீண்டதொரு விளக்கம்
சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப
காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம்
பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து
போனார்கள்.

இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக
வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.
"ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது
தானே...?""இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?""அனுமதி இல்லையா? ஏன்?"
இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.

மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன்
அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என
குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட
எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள்
ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில்
வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல
புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக்
கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ
சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.

"நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே...""ஆமாம்...
அதற்கென்ன?...""நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால்
உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை." என்றனர் மடத்துக்காரர்கள்.
"தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே...
நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?."
"பூகோள எல்லை கிடக்கட்டும் ... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி,
பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு
தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்.
அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை..."

கருநாடக மண்ணில் 'தமிழர்கள்' முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த
சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.

-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக