செவ்வாய், 1 நவம்பர், 2016

மத்தேயு அதிகாரம் 25:1-30

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு
மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு
ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர்
புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள்,
எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில்
எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து
தூங்கிவிட்டார்கள்.

6. நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு
எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள்
தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில்
எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே
என்றார்கள்.

9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும்
உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய்,
உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்;
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத்
திறக்கவேண்டும் என்றார்கள்.

12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள்
அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

14. அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு
மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய்
ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும்,
ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து,
உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

16. ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி,
வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.

17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.

18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய
பணத்தைப் புதைத்து வைத்தான்.

19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து,
அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.

20. அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக்
கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான
ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை
என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச்
சம்பாதித்தேன் என்றான்.

23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள
ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

24. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில்
அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன்
என்று அறிவேன்.

25. ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து
வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான
ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத
இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

27. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில்
போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை
வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,

28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.

29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்;
இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும்
எடுத்துக்கொள்ளப்படும்.

30. பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே
தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்
என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக