செவ்வாய், 1 நவம்பர், 2016

மத்தேயு அதிகாரம் 13:36-58

36. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய
சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு
வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.

38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள்
பொல்லாங்கனுடைய புத்திரர்;

39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு;
அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.

40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல,
இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய
ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும்
சேர்த்து,

42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும்
பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப்
பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

44. அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு
ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய
சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த
நிலத்தைக் கொள்ளுகிறான்.

45. மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு
ஒப்பாயிருக்கிறது.

46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான
எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

47. அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும்
சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.

48. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக்
கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.

49. இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு,
நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும்
பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

51. பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா
என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே,
என்றார்கள்.

52. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால்,
பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன்
எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும்
எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்
என்றார்.

53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,

54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே
உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த
செய்கைகளும் எப்படி வந்தது?

55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா?
யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?

56. இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?
இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,

57. அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி:
தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும்
கனவீனமடையான் என்றார்.

58. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக