1. இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்த பின்பு, அவர் கலிலேயாவை விட்டு
யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2. திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச்
சொஸ்தமாக்கினார்.
3. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து:
புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது
நியாயமா என்று கேட்டார்கள்.
4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர்
அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன்
மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்
என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே
மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன்
பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7. அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத்
தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள்
இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய்
அப்படி இருக்கவில்லை.
9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி,
அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம்
பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும்
விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம்
இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11. அதற்கு அவர்: வரம் பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு;
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம்
தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன்
ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
13. அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் கைகளை வைத்து ஜெபம்பண்ணுபடிக்கு
அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள்
அதட்டினார்கள்.
14. இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்;
அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது
என்று சொல்லி,
15. அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.
16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை
அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;
17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர
நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால்
கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
18. அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை
செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக,
பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
19. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.
20. அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல்
கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21. அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு
உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில்
உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா
என்றார்.
22. அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த
வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய
ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
24. மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில்
பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது
எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு:
அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
26. இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே
எல்லாம் கூடும் என்றார்.
27. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு,
உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.
28. அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின்
பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு
சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது,
தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது
விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும்
சுதந்தரித்துக்கொள்ளுவான்;
30. ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர்
முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக