செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 4

புத்தரும் X பிராமண‌ர்களும்.

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது,
மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம்
வேண்டாமா?...

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை
விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி ஆல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும்,
விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத
கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை
முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.

முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல
மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த
புத்தர்... தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை
தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம்.
முறுக்கேறிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய
குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.

எங்கேனும் வேள்விச்சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர்
படை.யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை
அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர்களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை
கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள்
நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.

நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து
கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே.
ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை...
ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம்
நடத்துபவர்கள்... உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம்
நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.

புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால்
கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக்
கும்பிடுவார்களே... அதே போல ஆனால் பதவியை எதிர்பாராமல் ஒவ்வொரு வீடாய்ப்
புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப்
போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள். இது தான்
புத்தோபதேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு
நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில்
மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன."Don't pour
innocent matters into the fire. God wants your love only"ஒன்றும்
அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள்
இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார் என
கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே
வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.

"Anti Vedic" வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை
பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர்.என்ன
செய்யலாம்?

மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்கலாம். இவை வெளிப்புற அடையாளங்கள்.
தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல்,
மனசிலிருந்து ஆசையைக் களைய வேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு
வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.

தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு
வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான்
முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...

உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள்
என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற
ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன.

மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின்
பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண்ணிக்கை
சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர
காரணமே. அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்தது தான் காரணம் என்ன
ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய
நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறு பரிசீலனை செய்ய
ஆரம்பித்தனர்.

உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர். பிராமணர்களின் மிகப் பெரிய
பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து
கொள்வது தான்.

ஆங்கிலத்தில் 'Adoption' என சொல்வோமே...புத்த இயக்கத்திடமிருந்து...
ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்.

இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இதுபோன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்
பிராமணர்கள்.

மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு
வந்தனர் பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...அக்னி ஹோத்ரம் ராமானுஜ
தாத்தாச்சாரியார்,

(தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக