புதன், 7 செப்டம்பர், 2016

சுவிசேஷங்களில் மிகச் சிறிய புத்தகம் - மாற்கு (பாகம் - 1)

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Markon Euangelion (The
Gospel according to Mark) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 41-வது புத்தகமாக வருகிறது.

☀ மாற்கு சுவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம்.

☀ சுவிசேஷங்களில் மிகச் சிறியதான இப்புத்தகத்தை எழுதியவர் மாற்கு என
சொல்லப்படுகிறது.

☀ இவர் இயேசுவின் அப்போஸ்தலருடைய உடன் ஊழியர், நற்செய்தியின் சேவையில்
தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்.

☀ ஆனால் இவர் 12 அப்போஸ்தலரில் ஒருவரல்ல, இயேசுவின் மிக நெருங்கிய
தோழர்களில் ஒருவரும் அல்ல.

☀ அப்படியென்றால், இயேசுவின் ஊழியத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை
உயிரோட்டத்தோடு நுட்பமாக விவரிக்க இவரால் எப்படி முடிந்தது? அவற்றை
பேதுருவிடமிருந்தே அவர் பெற்றிருக்க வேண்டும்; ஏனெனில் பேதுரு அவருடைய
நெருங்கிய கூட்டாளி.

☀ சொல்லப்போனால், பேதுரு அவரை 'என் குமாரன்' என்றுகூட அழைத்தார்!
(1 பே. 5:13)

☀ மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விவரங்களுக்கும் பேதுருவே கண்கண்ட
சாட்சி. ஆகவே மற்ற சுவிசேஷங்களில் இல்லாத பல விளக்கக் குறிப்புகள்
பேதுருவினிடமிருந்து அவருக்குத் தெரிய வந்திருக்கலாம். உதாரணத்திற்கு,
✍ செபெதேயுவுக்காக வேலைசெய்த 'கூலியாட்கள்'
✍ குஷ்டரோகி
"முழங்கால்படியிட்டு" இயேசுவைக் கெஞ்சிக் கேட்டது

✍ பிசாசுபிடித்த மனிதன் 'கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டது'
✍ இயேசு "தேவாலயத்துக்கு எதிராக" ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில்
"மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல்
வருகிறதைப்" பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தது போன்றவற்றை
குறிப்பிடலாம். (மாற். 1:20,40; 5:5; 13:3,26).

☀ பேதுருவைப் பொருத்தவரை அவர் ஆழ்ந்த உணர்ச்சியுள்ளவர். ஆகவே இயேசுவின்
உணர்ச்சிகளை அப்படியே மாற்குவுக்கு விவரித்திருந்தார்.

☀ அதன் காரணமாகவே மக்களுக்காக இயேசு பரிதாபப்பட்டு செயல்பட்ட விதத்தை
மாற்கு அடிக்கடி தன் பதிவில் குறிப்பிடுகிறார். உதாரணமாக,
✍ அவர் ஆழ்ந்த துக்கமடைந்து...
✍ அவர் ஆழ்ந்த
பெருமூச்சுவிட்டார்...

✍ "மிகவும் மனம்புழுங்கினார்" என்றெல்லாம் அவர் பதிவுசெய்கிறார்.
(3:5; 7:34; 8:12)

☀ பணம்படைத்த இளம் அதிபதியை அவர் அன்புகூர்ந்தார் என்று சொல்வதன் மூலம்
அவன்மீது இயேசுவுக்கிருந்த கனிவான உணர்ச்சியைப் பற்றி மாற்கு மட்டுமே
நமக்குச் சொல்கிறார். (10:21)

☀ மேலும் இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் சீஷர்களின் நடுவில் நிறுத்தினார்
என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், "அதை அரவணைத்து" என்றும்,
மற்றொரு சந்தர்ப்பத்தில் "பிள்ளைகளை அன்பாக அணைத்து" என்றும் கூறும்
விவரத்தில் எத்தகைய அன்புணர்ச்சியை நாம் காண்கிறோம். (9:36; 10:13-16)

☀ இயேசு கெத்செமனேயில் கைது செய்யப்படுகிறார். சீஷர்கள் அனைவரும் அவரைவிட்டு
ஓடிவிடுகின்றனர். அப்போது, 'ஒரு வாலிபர் ஒரு துப்பட்டியை மாத்திரம்
தன்மேல் போர்த்துக்கொண்டு' அவர் பின் செல்கிறார். கூட்டம் அவரையும்
பிடிக்க முயலுகிறது. உடனே 'அவர் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு,
நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போகிறார்.' மாற்குவே இந்த வாலிபராக
இருக்கலாம் என பொதுவாய் நம்பப்படுகிறது.

☀ இவர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் 'மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்' என
குறிப்பிடப்படுகிறார்.

☀ அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்குவின் வீட்டிற்கு (மாற்குவின்
தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப்
புசித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக